Saturday, August 29, 2020

வாமனனின் நடை

 *வாமனனின் நடை*


இன்று வாமன ஜெயந்தி. வாமனனை ஆழ்வார்கள் அனுபவித்த சில பாசுரங்களை கீழே நாமும் அனுபவிப்போம்.


திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமடலில் வாமன அவதாரத்து நிகழ்வுகளை நம் கண் முன்னே அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார். தன் உருவத்தை மாற்றிக் கொண்டு தான் யார் என்பதை மறைக்க தன் நடை உடை பாவனையையும் மாற்றிக் கொண்டு தன்னுடைய சொத்தான உலகத்தையே பெருமான் யாசித்துப் பெற்றது எத்தனை அழகு. மாவலி நம்பும் வண்ணம் வஞ்சித்து நெஞ்சுருக்கி நடந்து வந்தாராம். என்ன அழகான தமிழ்!


மற்றன்றியும், தன்னுருவ மாரும் அறியாமல் தானங்கோர், மன்னும் குறளுருவின் மாணியாய், - மாவலிதன் பொன்னியலும் வேள்விக்கண் புக்கிருந்து, போர்வேந்தர் மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி, என்னுடைய பாதத்தால் யானளப்ப மூவடிமண், மன்னா தரு கென்று வாய்திறப்ப, - மற்றவனும் என்னால் தரப்பட்ட தென்றலுமே, அத்துணைக்கண் மின்னார் மணிமுடிபோய் விண்தடவ, மேலெடுத்த பொன்னார் கனைகழற் கால் ஏழுலகும் போய்க்கடந்து,அங் கொன்னா அசுரர் துளங்கச் செலநீட்டி,மன்னிவ் வகலிடத்தை மாவலியை வஞ்சித்து, தன்னுலகம் ஆக்குவித்த தாளானை


நாச்சியார் திருமொழியில் திருவரங்கனுக்காக பத்து பாசுரங்கள் பாடிய ஆண்டாள் அதில் பெருமான் அவதாரங்களையும் இணைத்து பாடியுள்ளாள். அதில் வாமனர் பற்றி மட்டுமே மூன்று பாடல்கள் பாடியது குறிப்பிடத் தக்கது. அதில் முதல் பாட்டில் அதே நடையை ஆண்டாள் குறிப்பிடுவது இன்னும் அழகு. 

பெருமான் தன் கை வளையைக் கவர்ந்து கொண்டது பற்றி தோழிகளோடு உரையாடுவது போல் இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன. 

மாவலியிடம் வாங்கிக் கொண்ட பிச்சையில் குறையுண்டாகி அக்குறையை என் கையாலே தீர்த்துக் கொள்ள வேண்டுமென்று என் கைவளையிலே ஆசையுடையவராகில் இந்த அரங்கர் அன்று அங்கு நடந்த நடையை இத்தெருவில் என் கண் முன்னே நடந்து காட்ட வேண்டாமோ? என்று கேட்கிறாள்.


மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்

பச்சைப் பசுந்தேவர் தாம் பண்டு நீரேற்ற

பிச்சைக் குறையாகி என்னுடைய பெய்வளைமேல்

இச்சை உடையரேல் இத்தெருவே போதாரே


அடுத்த இரண்டு பாடல்களில் தன் கைவளை மட்டுமின்றி ஆத்மாவையும் எடுத்துக் கொண்டார் என்கிறாள். இதில் பொல்லாக் குறள் உருவாய் என்று குறிப்பிட்டது மிகவும் சுவை ஆனது. இது ஆண்டாளுக்கே உண்டான தனி பாணி.


பொல்லாக் குறளுருவாய்ப் பொற் கையில் நீரேற்று

எல்லாவுலகும் அளந்து கொண்ட எம்பெருமான்

நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்

இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்துளனே


கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர்

செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்

எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது நான்மறையின்

சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே


பொய்கை ஆழ்வாரோ இதை வேறு கோணத்தில் பார்க்கிறார். தன்னுடையது அல்லாத உலகத்தைத் தன்னதென்று நினைத்துக் கொண்டு செருக்கு கொண்டவன் மாவலி.  அவனைக் கொல்லாமல் தன் உலகத்தை அவனது போலவே பாவித்துச் சென்று யாசித்து பெற்ற மஹா குணம் பொருந்தியவன் எம்பெருமான். இப்படிப்பட்ட மஹா குணத்தில் ஈடுபடாமல் அவனை இந்த உலகம் பழிக்கின்றதே என்று வருந்துகிறார்


கொண்டானை யல்லால் கொடுத்தாரை யார் பழிப்பார்,

மண்தா எனவிரந்து மாவலியை, ஒண்தாரை

நீரங்கை தோய நிமிர்ந்திலையே, நீள்விசும்பில்

ஆரங்கை தோய அடுத்து?

Thursday, August 27, 2020

பொய்கை ஆழ்வார் - 2

 பொய்கை ஆழ்வார் பாகம் 2

பாசுரம் # 10

மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்,

விண்ணும் விழுங்கியது மெய்யென்பர் - எண்ணில்

அலகளவு கண்ட சீராழியாய்க்கு, 

அன்று இவ்வுலகளவும் உண்டோ உன் வாய்?


இந்தப் பாசுரத்திலோ அண்டம் முழுவதும் விழுங்கிய அவன் வாய் அப்பொழுது எவ்வளவு பெரியதாய் இருந்தது என்று ஆச்சரியத்துடன் வினவுகிறார். 

அதே சமயம் எண்ணிலடங்கா கல்யாண குணங்களை உடைய கருணைக் கடலான எம்பெருமான் சிறிய வாயினாலே பெரிய உலகங்களை எல்லாம் எளிதில் விழுங்க வல்ல அபார சக்தி கொண்டவன் என்பதே கருத்து.


இதில் இன்னும் ஒரு படி மேலே போய் கீழ் வரும் பாசுரத்தில் மண்ணை உண்டவன் வயிறு எப்படி யசோதை தந்த வெண்ணை உண்டு நிறைந்தது என்று கேட்கிறார். இங்கே அவன் பெருமைக்கு எதுவும் ஈடாகாது ஆனால் பக்தர்களுக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு வெண்ணை திருடுதல் போன்றன செய்து அவர்களோடு தன்னை சம்பந்தப் படுத்திக் கொள்கிறான் என்றே கொள்ள வேண்டும்.

பாசுரம் # 92


வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்

தேனாகிப் பாலாம் திருமாலே, - ஆனாய்ச்சி

வெண்ணெய் விழுங்க நிறையுமே, முன்னொருநாள்

மண்ணை உமிழ்ந்த வயிறு.


முத்தாய்ப்பாக அதே சேஷ்டிதத்தைப் பற்றி இந்தப் பாசுரத்தில் இன்னொரு கேள்வி வருகிறது


பாசுரம் # 69


பாலன் தனதுருவாய் ஏழுலகுண்டு * ஆலிலையின் 

மேலன்று நீ வளர்ந்து மெய்யென்பர் * - ஆலன்று 

வேலை நீருள்ளதோ? விண்ணதோ? மண்ணதோ? 

சோலைசூழ் குன்றெடுத்தாய்! சொல்லு


ஏழுலகுண்டு ஆலிலையின் மேல் துயின்றது சரி அப்பொழுது அந்த ஆலிலை என்கே இருந்தது? கடலிலா? வானிலா? மண்ணிலா? யாரால் இதை விளக்க முடியும்? கோவர்த்தன மலையை எடுத்துக் குடையாகப் பிடித்த அருஞ்செயலைக் காட்டிலும் இது பெரியது அன்றோ!

பொய்கை ஆழ்வார் - 1

 ஆழ்வார்களுள் முதலாழ்வார்கள் என்று முவர் அழைக்கப் பட்டாலும் அவர்களுள் முதலானவர் பொய்கை ஆழ்வார்.


பொய்கை ஆழ்வார் தம் முதல் திருவந்தாதியில் சில பாசுரங்களில் சுவையான வினாக்களை எழுப்பி சில முரண்பாட்டுக்களையும் சுட்டிக் காட்டுகிறார். இவை ஆழ்வார் ஐயத்தால் எழுப்பியது போல் முதல் பார்வையில் தோன்றினாலும் ஆழ்ந்து பார்க்கையில் அவருடைய தேடலும் அவர் பெருமானையும் அவர் அவதாரங்களையும் நன்கு அனுபவித்ததும் தெரியும். பெருமான் ஒரு வரையறைக்குள் அடங்காதவன் என்பதும் பல அமாநுஷ்யமான சேஷ்டிதங்களைச் செய்து தன் பரத்துவத்தை சாதித்தவன் என்பதுமே மேலோட்டமாக ஆழ்வார் சொல்ல வந்தது.


மேலே சில பாசுரங்களை ஒவ்வொன்றாக அனுபவிப்போம்


பாசுரம் # 9

பொருகோட்டோர் ஏனமாய்ப் புக்கிடந்தாய்க்கு, 

அன்று உன் ஒரு கோட்டின் மேல்கிடந்ததன்றே, - 

விரிதோட்ட சேவடியை நீட்டித் திசை நடுங்க 

விண்துளங்க, மாவடிவில் நீயளந்த மண்?

இதில் வராக அவதாரத்தையும் திருவிக்கிரம அவதாரத்தையும் ஆழ்வார் அனுபவிக்கிறார்


அதாவது திருவிக்கிரமனாய் மிகப் பெரிய வடிவு கொண்டு திருவடியை நீட்டி அளந்த அதே உலகம் வராஹ அவதார காலத்தில் உனது திருஎயிற்றிலே ஒரு சிறு மணி போலக் கிடந்ததே என்கிறார்.


இப்படித் தான் தன் பக்தர்களைக் காப்பாற்றுவான் என்று அவனுக்கு ஒரு நியதில்லை என்றும் இங்கே பொருள் உண்டு என்று பூர்வாச்சாரியர்கள் இதற்கு அழகான விளக்கம் தந்துள்ளனர்.


பாசுரம் # 2


என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீரேற்றது,

ஒன்றும் அதனை உணரேன் நான் - அன்று

அது அடைத்து உடைத்துக் கண்படுத்த ஆழி, 

இது நீ படைத்து இடந்து உண்டுமிழ்ந்த பார்


இதன் பொருள் - அமரர்களுக்காக கடல் கடைந்து அமுதம் தந்த பெருமானே, இராமனாய் கடலின் மீது பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று, பின் வெற்றி பெற்று திரும்பும் போது அந்தப் பாலத்தை இடித்தவன்?


தான் படைத்த உலகத்தையே தானே, அவன் நீரேற்று வாமனனாய் பெற்றதும், வராஹ அவதாரத்தில் தன் திருஎயிற்றிலே ஏந்தி மீட்டதும், பிரளய காலத்தில் உண்டு காத்ததும் பின் உமிழ்ந்ததும்?


தான் இந்நிகழ்வுகளை நேரில் காணா வருத்தத்தை ஒரு புறம் கூறினாலும், தன் பக்தியால் அனைத்து நிகழ்வுகளையும் அடுத்தடுத்து கண் முன்னே பார்க்கின்றது போல் இதே பாசுரத்தில் ஆழ்வார் தெரிவிப்பது அருமை.

ஆழ்வார்கள் அனுபவம்

 ஆழ்வார்கள் அனுபவம் பற்றி எழுத வேண்டும் என்று எனக்குள்ளே சில நாட்களாக ஏதோ ஒரு உந்துதல். ஆச்சார்யர்கள் சொல்லாததோ? வைணவம் காணாததோ? இதில் எதை நீ சொல்லப் போகிறாய் என்று ஒரு குரல் நியாயமாகத் தடுத்தாலும் முயற்சியைத் தொடர்ந்தேன். முதல் கட்டுரை பொய்கை ஆழ்வாரைப் பற்றியது.

Thursday, September 21, 2017

உண்டோ சடகோபர்க்கு ஒப்பு

நீண்ட தமிழ் பதிவு .. முகநூலில் என்னுடைய முதல் பதிவும் கூட. 
இந்தப் பதிவு எழுத ஆரம்பித்து பாதி முடிந்த பிறகு என்னை ஓரு பயம் சூழ்ந்து கொண்டது. நம்மாழ்வார் எவ்வளவு பெரியவர் அவரைப் பற்றி நாம் எழுதுவதா என்று! இருந்தாலும் கடவுள் மேல் பாரத்தைப் போட்டு எழுதி முடித்து விட்டேன்.
யாமறிந்த புலவரிலே வள்ளுவன் போல் கம்பனைப் போல் இளங்கோவைப் போல் யாங்கனுமே கண்டதில்லை .. நமக்குத் தெரிந்த வரிகள். இது சடகோபரைப் (நம்மாழ்வார்) போல் என்று தொடங்கி இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
நான் நம்மாழ்வார் என்கிற சடகோபரைப் பற்றி முழுதாய் அவருடைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாசுரங்களைப் படித்து இன்னும் ஆராயவில்லை. நான் படித்த சிலவற்றுள் அதற்கு முன்னோர்கள் எழுதி வைத்த விளக்கங்களில் இருந்து சிலவற்றை படித்ததில் எனக்கு எட்டிய அளவில் சொல்கிறேன்.
வேதத்தை தமிழ்ப்படுத்தி என்னை மனம் கவர்ந்த ஈசனாம் திருமாலை மட்டுமே போற்றும் பாடல்கள் இவை என்பதை சில நிமிடங்கள் அப்புறப்படுத்தி வைத்து அப்பாடல்களில் பொதிந்திருக்கும் ஆழ்ந்த தத்துவப் பொருட்களையும் சிறிது நேரம் ஆராயாமல் அவற்றிலுள்ள தமிழை மட்டும் கொஞ்சம் பார்ப்போம்.
திருவிருத்தம் பாசுரங்களில் மாலையை வருணித்து வரும் சில உவமைகள்
1. வால்வெண்ணிலவு உலகாரச் சுரக்கும் வெண்திங்களென்னும்,
பால்விண் சுரவி சுரமுதிர் மாலை
பொருள்:
விண்ணில் இருக்கும் நிலவு என்கிற பசுவானது அழகிய வெண்மையான நிலவொளியை உலகம் எங்கும் நிறைக்கும் மாலைப் பொழுது
2. திங்களம்பிள்ளை புலம்பத் தன் செங்கோலரசுபட்ட
செங்களம் பற்றி நின்றெள்குபுன் மாலை
பொருள்:
சந்திரன் என்ற அழகிய பிள்ளை (தந்தயை இழந்து) தனிப்பட, உலகெங்கும் சிவந்த ஒளியைப் பரப்பும் சூரியன் என்கிற தன் தலைவன் மறைந்த செவ்வானம் ஆகிய போர்க்களத்தை அடைந்து மாலை என்னும் பெண் வருத்தத்தோடு நின்றாள்
3. சீரரசாண்டுதன் செங்கோல் சிலநாள் செலீஇக்கழித்த,
பாரரசொத்து மறைந்தது ஞாயிறு
பொருள்:
சிறப்பாக நீதி தவறாமல் அரசாண்டு தன் பதவிக் காலம் முடிந்த அரசனைப் போல் சூரியன் அஸ்தமித்தது
4. காரேற்றிருள் செகிலேற்றின் சுடருக்குளைந்து, வெல்வான்
போரேற்றெதிர்ந்தது புன்தலை மாலை
பொருள்:
கருத்த இருளாகிய எருது சிவந்த சூரியன் என்னும் எருதை வெல்லும் பொருட்டு போர் செய்ய எதிர்த்து நின்றது
என்ன அழகான எவ்வளவு வித விதமான உவமைகள் எப்பேற்பட்ட தமிழ்!
இது போல் தலைவியின் கண்களை வருணித்து பல உவமைகள் .. இன்னும் பல பல .. இன்னொரு பதிவில் எழுதுகிறேன்.
உண்டோ சடகோபர்க்கு ஒப்பு?

Sunday, September 17, 2017

Haircut - A time for Reflection

Haircut is not only a time for reflection given the long stare at the mirror, It is also a time to hear some old songs which feature in channels that I never switch on these days. What used to take 6 songs easily with ads and waiting time now gets done in 3 songs. So it is not only me! At this rate barbers are going to be out of business soon! 😀
Coming back to the songs, it was Sridevi's songs today all by one music director. Was wondering how only the songs alone continue to remain young.. We all know how Sridevi looks now inspite of all the surgeries and Botox, but the music doesn't need all that. What great compositions!
Do I need to tell the music director's name?  Perai Sollavaa? Adhu nyaayam aaguma?! 😀

Saturday, July 29, 2017

மாற்றம்

மாறியது கண்ணாடியில் தெரியும் பிம்பம் மட்டுமல்ல .. நானும்
வெற்றிகள் தந்த போதை தலை விட்டு தரை இறங்க
தோல்விகள் பழகிப் போன வலிகளாய் ஒதுங்கி நிற்க
தொலைந்து போய்க் கண்டு பிடித்த இன்பங்கள் மேலோங்க

மாறியது கண்ணாடியில் தெரியும் பிம்பம் மட்டுமல்ல ..
கடந்தது போல் வருவதும்
நல்லதுக்கே என்று புன்னகையோடு காத்திருக்கும் நானும்!